Friday, November 4, 2011

மரணத்தைக் கையால் தொட்டுப்பார்த்திருக்கிறீர்களா? அது மிகவும் பிசுபிசுப்பானது. கண்மை போல ஒட்டிக்கொண்டு நீங்க மறுத்தவண்ணமே இருக்கக்கூடியது. சற்றுமுன் கடந்து போன சாலைமனிதன் அடுத்த நிறுத்தத்தில் அடிபட்டு இறந்துபோனால் கூட அதன் நினைவு அன்று முழுக்க நிலைத்து நின்று விசனம் தரும். மிக நெருங்கியவர்களின் மரணம் சில சம‌யம் நம் வாழ்கையின் சில பகுதிகளையும் அவர்களுடனே எடுத்து சென்றுவிடுகிறது. யாருக்கும் அகப்படாமலும், கட்டுப்படாமலும், புரிதல்களுக்கு அப்பாற்பட்டும் இருப்பதாலோ என்னவோதான் மரணத்தின் மீது மிகுந்த மரியாதையும் அச்சமும் கொண்டிருக்கிறோம். மேலும் ஒரு படி சென்று மரணத்தைக் கொண்டாடவும் ஆராதிக்கவும் கூட செய்கிறார்கள். மரணம் ஒரு சம்பவம் என்பதைக் கடந்து அது ஒரு தத்துவம் என்ற நிலையைக் கொள்கிறது. மரணம் பற்றிய பயமும், புரிதலின் முயற்சியுமே ஆன்மிகத் தேடலின் ஆரம்பப்புள்ளி.
- இந்த அர்த்தமுள்ள வரிகளை இதற்கு முன் நீங்கள் படித்திருக்கவில்லை என்றால், இங்கே செல்லவும்..
பொதுவாக கடவுளிடம் வேண்டும் போது அது நிச்சயம் நிறைவேறிட வேண்டும் என்று தான் வேண்டிக் கொள்வோம்.. அது வேண்டும் இது வேண்டும்.. நடக்க வேண்டும் .. நடக்க கூடாது என்ற வரையறைக்குள் இருந்த எனது பிரார்த்தனைகள் முதல் முறையாக எனது தந்தை வழி பாட்டிக்கு மரணம் நிகழ வேண்டும் என்று வேண்டுதலுக்கு உட்படுத்தியது..
ரஜினி பாட்ஷாவில் சொன்னது போல்.. எட்டாம் எட்டுக்கு மேல இருந்தா நிம்மதியில்லை.. ஆனால் எனது பாட்டிக்கு பத்தாம் எட்டை தாண்டு மூன்று வருடங்கள் கடந்திருந்தது.. அண்ணி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அதே காலக்கட்டத்தில் பாட்டியின் உடல்நிலையும் மோசமாகிக் கொண்டே இருந்தது.. அண்ணனின் மகளின் உதைகளை உணர்ந்திருந்த அதே நாட்களில் பாட்டியின் ஒவ்வொரு செயல்பாடுகளும் குறைந்து கொண்டே வந்தது..
எந்த நேரமும் பாப்பா பிறந்து விடலாம்.. எந்த நேரமும் பாட்டியை இழந்து விடலாம் இப்படி தான் இருந்தது ஒரு சில நாட்கள்.. “ஜணனமும் மரணமும் சந்திக்கும் காலம்” என்று சொல்லுவார்களே.. அப்படித் தான் குழலி பிறந்த நான்கே நாட்களில், எனது அப்பா வழிப் பாட்டியை நாங்கள் இழந்தோம். ஜணனத்தின் பேரானந்தமும் மரணத்தின் பெருந்துயரமும் ஒரே காலக்கட்டத்தில் அமைந்தது காலத்தின் கட்டாயம்..
மரணத்தைப் பற்றி பேசுவது என்றாலே சிலருக்கு நடுக்கம் வந்துவிடுவது ஏன்.. நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன்.. அடுத்த தலைப்பு மரணம் என்று சொன்ன மாத்திரம் தான் .. சரி நான் போறேன் என்று கிளம்பிவிட்டார்.. மரண பயம் என்று சொல்வார்களே அது எல்லாருக்குமே இருப்பது தானா..
திருமண சடங்குகளைப் போல, மரணத்திற்கு செய்யும் சடங்குகளும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வேறுபட்டு இருந்தாலும் மரணத்திற்கு என்று ஒரு வாசமிருக்கும்.. ஒரு சில சமயம் அது நெஞ்சை பிசைவது போல இருக்கும்.. ரோஜா, சம்பங்கி, ஊதுபத்தி, விடாது கேட்டுக்கொண்டிருக்கும் அந்த ஒப்பாரி சத்தம்.. எல்லாமே மரணத்தை எளிதில் நமக்கு சுட்டிக்காட்டி விடுகிறதல்லவா..
எனது பெரியம்மாவின் மரணம் தான் முதன் முதலில் மரணத்தை எனக்கு அறிமுகப்படுத்தியது .. அம்மாவை விட அதிகமான அன்பு செலுத்திய அவர்களின் மரணம் அப்போது முழுமையாக புரியவில்லை என்றாலும் அன்று இரவில் எழுந்து எழுந்து அழுதேன்.. “அப்பா.. அம்மா.. நாம எல்லாருமே செத்து போய்டுவோமா”.. அந்த ஒரு எண்ணம்.. ஏதோ கொஞ்சம் தைரியமாக இருந்த என்னை கோழையாக்கியது.. எப்போதும் பயந்து கொண்டிருக்கும் எனது அண்ணாவை தைரியமாக்கியது.. அதன் பிறகு எப்போதாவது சில சமயம் துக்கம் தொண்டை வரை இருக்கும் போதெல்லாம்.. நாம செத்து போயிட்டா என்ன எல்லாம் நடக்கும்.. யாரெல்லாம் அழுவாங்க என்று அடிக்கடி யோசிப்பதுண்டு..
அந்த வருடம் மட்டும் தொடர்ந்து 4 மரணம் நிகழ, மரணமே சலித்து விட்டது பலருக்கு.. அதன் பிறகு அதிகமாக நடக்காத போதினும் மரணத்திற்கு என்று ஒரு பேட்டர்ன் (Patten) இருப்பதை உணர முடிந்தது.. ஒப்பாரி பாடல் பாட எப்படி சிலரை அழைக்கிறார்கள் என்று விநோதமாக இருக்கும்.. ஆனால் அந்த அழுகை சத்தத்தில் ஆழமாக தேங்கி இருக்கும் அந்த மன அழுத்தம் அழுகையாக வெளிவர உதவுகிறது.. ஒரு சிலர் இருப்பார்கள்.. இறந்தவர்கள் நெருக்கிய உறவு இல்லை என்றாலும் ஓ வென்று சொந்த மகளைப் போல் அழுவதுண்டு.. மற்ற விஷயங்களுக்கெல்லாம் அழுது கொள்ள உதவிவிடுகிறது யாரோ ஒருவரது மரணம்..
என்னதான் துக்கம் அடைத்து கொண்டிருந்தாலும், வந்த சொந்தகாரங்களுக்கு காப்பி கொடுக்க வேண்டிய பொறுப்பு மகளுக்கோ மருமகளுக்கோ இருந்து கொண்டே இருக்கும்.. எப்போது இழவு வீட்டிற்கு சென்றாலும் காப்பி கிடைக்கும்..
எல்லாரும் அழுது கொண்டும் துக்கம் விசாரித்து கொண்டிருந்தாலும் தானாக வேலைகள் நடந்து கொண்டே இருக்கும்.. பாடை கட்டுவது முதல் ஊர்வலத்தில் நடனமாடுபவர்களுக்கு சரக்கு வரை அது பாட்டுக்கு சில மணி நேரங்களில் தயாராகி விடுகிறது.. அந்த ஊர்வலத்தில் அடிக்கும் அந்த மணி தான் முக்கியமானது.. அந்த ஒலியில் பல உண்மைகளை பறைசாற்றுவது போலிருக்கும் எனக்கு.. எங்க போனாலும் எங்கு வந்தாலும் மரணம் தவிர்க்க இயலாதது.. அந்த விதிக்கு கட்டுப்பட்டு வாழ்ந்தால் எத்தனையோ சிக்கல்கள் சுலபமாக தெரியலாம்..
மரணத்தை போன்ற ஒரு பாடசாலை வேறு எதுவும் கிடையாது.. எப்போதும் என்னையும் அண்ணனையும் திட்டிக் கொண்டே இருக்கும் பாட்டியை நாங்கள் வெறுத்து கொண்டே வந்திருந்தோம்.. ஒரு முறை நிலைமை மிகவும் மோசமாகி ஆஸ்பத்திரியில் இருந்த போது நாங்கள் உண்மையிலேயே பயந்து போயிருந்தோம்.. இன்னும் சில நாட்கள் தான் பாட்டி நம்முடன் இருக்க போகிறார் என்ற உணர்வு அவர்களிடத்தில் காட்டிய வெறுப்பை குறைத்தது.. முடிந்த வரை அவர்களது ஆசையை நிறைவேற்றி, அவங்களுக்கு எங்கள் மீது இருந்த வெறுப்பும் குறைந்து நல்ல பேரன் பேத்தி என்ற பெயரும் எடுத்தோம்..
தினம் தினம் வலியில் கதறிக் கொண்டிருந்த அவருக்கு மரணம் சீக்கிரம் வரவில்லை.. எப்படியோ பேரனின் மகளைப் பார்த்து விட்டு செல்ல வேண்டும் என்று உயிரை கையில் பிடித்திருந்தார் போல..
ஒரே நாள் மட்டும் நான் தனியாக வீட்டில் பாட்டிக்கு துணையாக இருக்க மற்றவர்கள் எல்லாம் மருத்துவமணைக்கு சென்று விட்டனர் – அண்ணிக்காக.. ஒவ்வொரு கணமும் பயமுடன் நகர்ந்தது எனக்கு.. பாட்டியால் நகரக்கூட முடியாததால் சுகாதாரத்திற்காக ஒரு தனியறையில் தங்க வைத்திருந்தோம்.. அடிக்கடி அந்த அறையில் எட்டிப்பார்த்து உயிருடன் இருக்கிறாரா என்று தயங்கி தயங்கி பார்த்தேன்.. ஒரே ஒரு நாள் ஒரு மணி நேரம் மொபைல்/ கம்ப்யூட்டர் / டிவி இல்லாமல் எத்தனையோ பேருக்கு எரிச்சலாக இருக்கும்.. தனி அறையில் பேச கூட யாருமில்லாமல் மரணத்தை எதிர்நோக்கி வலியை பொறுத்து கொண்டிருக்கும் எனது பாட்டிக்காக கண்கள் கலங்கியது.. இந்த வலியில் இருந்து அவள் விடை பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்தது மனது..
அண்ணனுக்கு மகள் பிறந்த செய்தி கேட்டவுடன் மனம் சந்தோஷத்தில் துள்ளியது.. அந்த சேதியை யாரிடம் முதலில் சொல்லுவது என்று ஒரே படபடப்பு.. நெருக்கிய நண்பனிடம் முதலில் தெரிவித்துவிட்டு உடனே பாட்டி இருந்த அறைக்கு சென்று சேதி சொன்னேன்.. பல உணர்வுகளை இழந்து கொண்டே இருந்த அவருக்கு, பெண் பிறந்திருக்கிறாள் என்ற சேதி மட்டும் கேட்டிருந்தது.. “பொண்ணா.. பொண்ணு தான் நல்லது.. பொண்ணு தான் என்று முணுமுணுத்துக் கொண்டார்..
அந்த சேதி சொன்னதற்கு பின்னர் நான் அந்த அறைக்கே செல்லவில்லை.. கடைசியாக அவர் உயிர் வாழ்ந்த சில மணித்துளிகள் மட்டும் மீண்டும் அந்த அறைக்கு சென்று பிரார்த்தனை செய்தேன்.. சத்தமில்லாமல் மெல்லியதாக பிரிந்தது.. சென்னையிலிருந்து வேலூர் கொண்டு சென்று அமைதியாக நடந்தது இறுதி ஊர்வலம்.. பெரிய சாவு இப்படி நடத்தறீங்களே என்ற பலரின் பேச்சுக்களையும் மீறி எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக நடந்தது இறுதி ஊர்வலம்..
காரியம் கூட வழக்கமாக செய்யாமல், அனைவரும் ஒன்றாக அமர்ந்து பாட்டியுடன் இருந்த கணங்களை நினைவு கூர்ந்தோம்.. பாட்டியின் அக்கா தங்கை, ஒரு சகோதரியாக தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.. அப்பாவின் பேச்சு தான் பலரையும் கலங்க செய்தது.. ஒரு பணக்கார வீட்டு பெண்ணாக இருந்து பின்னர் கூலி வேலை வரை செய்த அந்த கதைகளை சொல்ல சொல்ல.. இதெல்லாம் ஏன் நமக்கு முன்னாடியே தெரியாமல் அல்லது புரியாமல் போனது என்று வெட்கமாக இருந்தது..
எப்போதுமே ஒன்றை இழந்த பின்னர் தான் அதன் மதிப்பும் மரியாதையும் நமக்கு ஓங்கி உறைக்கும்.. மரணத்தால் நமக்கு கிடைக்கும் பாடங்கள் ஏராளம்.. அதில் முக்கியமான ஒன்று இழந்த பின்னர் உறவுகளை உணர்வதில் அர்த்தமில்லை. இன்றே எல்லா உறவுகளையும் உணர்வுகளையும் மதிப்போம்.. இன்று (பெப்ருவரி 24 தேதி ) பாட்டியின் முதல் அஞ்சலி தினம். அவர்களுக்கு இந்த பதிவை சமர்ப்பிக்கிறேன்.. 

Courtesy: http://pinkurippukal.blogspot.com/2009/07/blog-post.html

No comments:

Post a Comment